மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம்(டூடுல்) வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி உள்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர்.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்பு தினங்களை அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் திருவிழாவை குறிப்பிடும் வகையில் கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள கூகுள் பயனர்களுக்கு தெரியும். இதில் Google என ஆங்கில மொழியில் உள்ள கூகுள் தளத்தின் முகப்பில் உள்ள இரண்டாவது "O"வுக்குப் பதிலாக சுட்டு விரலில் வாக்கு செலுத்தியதற்கான அடையான மையுடன் கூடிய எமோஜி வகையிலான படம் இடம்பெற்றுள்ளது. அது வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பயனர்களுக்கு நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.