மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்பு தினங்களை அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
முதல்கட்ட மக்களவைத் தேர்தலின்போது சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில், கூகுள் லோகோவுக்கு மத்தியில் வாக்களித்ததற்கு அடையாளமாக மை பூசப்பட்ட ஆள்காட்டி விரல் இடம் பெற்றுள்ளது.
இந்த கவன ஈர்ப்பு சித்திரத்தை கிளிக் செய்யும்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது மக்களவைத் தேர்தலின் சமீபத்திய புதுப்பிப்புகள் வருகின்றன.