காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி
மத்திய பாஜக அரசு தில்லி காவல் துறையை தவறாக பயன்படுத்துவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா தொடர்பான போலி விடியோ விவகாரத்தில் தெலங்கானா முதல்வருக்கு தில்லி காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இஸ்லாமியர்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித் ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் விடியோ மாற்றப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸார் சித்தரித்து விடியோவை பரப்பி வருவதாகவும் பாஜகவின் செய்தித்தொடர்பாளர் அமித் மாலவிகா குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, அமித்ஷாவின் விடியோவை சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட விடியோவை பகிர்ந்ததாக கூறி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று தில்லி காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இதற்கு தெலங்கானா முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு தில்லி காவல் துறையை தவறாக பயன்படுத்துவதாகவும், பாஜக அரசின் புதிய கருவியாக தில்லி காவல் துறை இணைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.