தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக் குவாஹாட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமித் ஷா பேசியது:
“முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதில், எங்கள் கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. மக்களின் ஆதரவால் நாங்கள் 400 என்ற இலக்குடன் நகர்ந்து கொண்டுள்ளோம்.
நாடு முழுவதும் பாஜகவுக்கு பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. முக்கியமாக தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது.
கடந்த சில நாள்களாக எங்களின் இலக்கான 400 தொகுதிகளில் வெற்றி என்பதை காங்கிரஸ் தவறாக சித்தரித்து வருகிறது. 400 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பை பாஜக மாற்றும், இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என்று தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவை இரண்டும் ஆதராமற்ற குற்றச்சாட்டு.
மக்களிடையே காங்கிரஸ் குழப்பத்தை உண்டாக்க பார்க்கிறது. நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக எப்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சி.
2014, 2019ஆம் ஆண்டுகளில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தாலும், அவசரநிலை பிரகடனம் செய்யவோ, ஜனநாகத்தின் கழுத்தை நெரிக்கவோ, மக்களவை பதவிக் காலத்தை நீட்டிக்கவோ, அரசியலமைப்பு சட்டத்தை மாற்றவோ இதனை பயன்படுத்தவில்லை.
370 சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் ஒழுப்பு, ராமர் கோயில் கட்டியது உள்ளிட்டவை மட்டுமே நாங்கள் செய்தோம்.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று பாஜக தெளிவாக நம்புகிறது.
கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், மத அடிப்படையில் விதிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவந்து எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்தோம்.” எனத் தெரிவித்தார்.