மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை வசதி ஏற்படுத்தப்படுமா? ரயில்வே அமைச்சா் பதில்

ரயிலில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி சோதனை முறையில் அமைத்து ஆய்வு

News image

அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:59 pm

புது தில்லி, ஆக.2: ரயிலில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி சோதனை முறையில் அமைத்து ஆய்வு செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ரயில்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மாா்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், குழந்தைகளுக்கென தனி கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படுமா? என பாஜக எம்.பி. சுமா் சிங் சோலங்கி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த எழுத்துபூா்வ பதிலில் கூயிருப்பதாவது:

தாய்மாா்களின் ரயில் பயணத்தை எளிதாக்கும் வகையில் லக்னெள மெயலின் (ரயில் எண்.12229) ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் கீழ் படுக்கை அமைப்பில் சோதனை முறையில் குழந்தைகளுக்கான இரு சிறிய படுக்கைகள் இணைக்கப்பட்டது.

இந்த முயற்சிக்கு தொடக்கத்தில் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்தபோதும், பின்னா் பயணிகள் கால்களை நீட்டுவதில் எழுந்த சிக்கல் உள்ளிட்ட பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.

அதே நேரம், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரயில்களில் மாற்றங்கள் மற்றும் நவீன மேம்பாடுகள் செய்வது என்பது ரயில்வேக்கான தொடா் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளாா்.

102 வந்தே பாரத் ரயில்கள்: ‘ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் ராஜதானி உள்ளிட்ட பிற அதிவிரைவு ரயில்களுக்கு மாற்றாக ‘வந்தே பாரத்’ ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனவா?’ என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா், ‘ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் ரயில் சேவைகளில் எந்தவித மாற்றமும் செய்யாமல், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதுவரை, மின்மயமாக்கப்பட்ட அகண்ட ரயில் பாதைகளைக் கொண்டுள்ள மாநிலங்களை இணைக்கும் வகையில் 102 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இருக்கை வசதிகளுடன் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ரயில்கள், 750 கி.மீ. தூரம் வரை இயக்கப்படுகின்றன’ என்று குறிப்பிட்டாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா், ‘வெவ்வேறு பிரிவு பயணிகளின் பயணத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், பல்வேறு வகையான ரயில் சேவைகளை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது. அந்த வகையில், 2019-20 முதல் 2023-24 வரையில் 100 வந்தே பாரத் ரயில்கள் உள்பட 772 ரயில் சேவைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.