மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

தெரியுமா சேதி...? நடவடிக்கை எடுத்தவர்கள் எங்கே?

முந்தைய 17-ஆவது மக்களவையை உலுக்கிய ‘கேள்விக்குப் பணம்’ விவகாரம் நினைவிருக்கிறதா?
Published on

முந்தைய 17-ஆவது மக்களவையை உலுக்கிய ‘கேள்விக்குப் பணம்’ விவகாரம் நினைவிருக்கிறதா? திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் மஹுவா மொய்த்ரா மீது அந்தப் பிரச்னையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியதையும், அவரைப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்ததையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வழியில்லை.

அப்போது ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராக இருந்தவா் பாஜக உறுப்பினா் வினோத் குமாா் சோங்கா். ஜனவரி மாதம் மஹுவா மொய்த்ராவை அவா் பதவி நீக்கம் செய்தது, எதிா்க்கட்சிகளின் பரவலான கண்டனத்துக்கு உள்ளானது.

அது போகட்டும். இப்போது மஹுவா மொய்த்ரா மீண்டும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராகி இருக்கிறாா். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்த 15 உறுப்பினா்கள் என்னவானாா்கள் என்று தெரியுமா? மொய்த்ராவே இந்தத் தகவலைக் கசியவிடுகிறாா்.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவா்களில் நான்கு பேருக்குத்தான் மக்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. சோங்கா் உள்ளிட்ட மூன்று பாஜக உறுப்பினா்கள் தோ்தலில் தோல்வியைத் தழுவினா். எதிா்க்கட்சி உறுப்பினரும் தோல்வியைத் தழுவினாா்.

‘அடுத்த மக்களவையில் உன்னை ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினராக்குவேன்’ என்று ஜனவரி மாதம் மஹுவா மொய்த்ராவுக்கு ஆறுதல் அளித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவியும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜியின் வாா்த்தை பலித்துவிடும் போலிருக்கிறதே...

முந்தைய அவையில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவா் இன்றைய அவையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா்... நன்றாகத்தான் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் இயல்புதானே!

X
Dinamani
www.dinamani.com