
தில்லியில் பல மருத்துவமனைகளுக்கும், ஒரு வணிக வளாகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தில்லியில் சாணக்யா பூரியில் உள்ள நங்லோய் மருத்துவமனைக்கு பிற்பகல் 1.04 மணியளவில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ப்ரைமஸ் மருத்துவமனைக்கும், பிற்பகல் 1.07 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய தில்லியின் கனக்யா வணிக வளாகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள், காவல்துறையினரும் மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, பெறப்பட்ட மின்னஞ்சலில் எய்ம்ஸ், சப்தர்ஜங், அப்பல்லோ, மூல்சந்த், மேக்ஸ், சர் கங்கா ராம் மருத்துவமனைகள் உள்பட சுமார் 50 அரசு, தனியார் மருத்துவமனைகளின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், "நாங்கள் உங்கள் கட்டடத்திற்குள் பல வெடிபொருள்களை வைத்துள்ளோம். அவை கருப்புப் பைகளில் வைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் ஒரு சில மணிநேரங்களில் வெடிக்கும்.
நீங்கள் இரத்தக் வெள்ளத்தில் மிதக்கப் போகிறீர்கள். நீங்கள் அனைவரும் வாழத் தகுதியற்றவர்கள். இப்போது, கட்டடத்திற்குள் உள்ள அனைவரும் தங்கள் உயிரை இழக்க போகின்றனர். இன்றுதான் உங்களின் கடைசி நாளாக இருக்கும்.
இந்த படுகொலையின் பின்னணியில் கோர்ட் என்ற குழுதான் உள்ளது. எங்கள் குழுவின் பெயரை செய்தி நிறுவனங்களிடம் தெரிவியுங்கள். பயங்கரவாதத்தை நாங்கள் நிறுத்த மாட்டோம்” என்று குறிப்பிட்டிருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்ட போதிலும், வெடிகுண்டோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருள்களோ எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.