.avif?rect=1%2C0%2C572%2C322&w=480&auto=format%2Ccompress&fit=max)
.avif?rect=1%2C0%2C572%2C322&w=480&auto=format%2Ccompress&fit=max)
ஜார்க்கண்டில் அணையில் விழுந்த பயிற்சி விமானத்தில் இருந்து பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜார்கண்டின் தலைநகர் ஜாம்ஷெட்பூரில் இருந்து புறப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயணம் செய்த பயிற்சி விமானி மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரின் உடல்கள் சண்டில் அணையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
சோனாரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானமான செஸ்னா 152, செவ்வாய்க்கிழமை காலை காணாமல் போனது. அதைத் தொடர்ந்து அணையின் நீர்த்தேக்கம் உள்பட அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
ஆதித்யபூரில் வசிக்கும் பயிற்சி விமானி சுப்ரோதீப் தத்தாவின் உடல் காலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாட்னாவைச் சேர்ந்த விமானி கேப்டன் ஜீத் சத்ரு ஆனந்தின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு பணியகம், விமான பயிற்சி இயக்குநரகம் மற்றும் விமான தகுதி இயக்குநரகம் ஆகியவற்றுடன் இணைந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆறு பேர் கொண்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் அணையின் நீர்த்தேக்கத்தில் புதன்கிழமை பல மணி நேரம் தேடினர். விமானம் விபத்துக்குள்ளானதாக கிராம மக்கள் கூறினர். அணையில் ஒரு ஜோடி காலணிகள் மிதந்ததை அடுத்து உடல்களை தேடும் பணி நடத்தப்பட்டது.
பின்னர் அதன் அடிப்படையில் நீர்த்தேக்கம் அருகே தேடப்பட்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக செரைகேலா-கர்சவான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் லுனாயத் தெரிவித்தார்.
இந்தப் பயிற்சி விமானமானது 30,000 மணிநேரம் பறக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது. ஆனால், 16,000 மணிநேரத்தை மட்டுமே நிறைவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.