சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்ல தயார்.. ஆனால்: ராகுல்

சம்பலுக்கு செல்லவிடாமல் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது பற்றி...
ராகுல் காந்தி
ராகுல் காந்திPTI
Published on
Updated on
1 min read

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தில்லியில் இருந்து சாலை வழியாகச் சென்றனர்.

ஆனால், சம்பலில் வெளிஆள்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருப்பதை தொடர்ந்து, உத்தரப் பிரதேச எல்லையில் ராகுல் உள்ளிட்டோரின் கார்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதாவது:

“நாங்கள் சம்பலுக்கு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால், காவல்துறையினர் தடுத்துள்ளனர். எங்களை முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக அப்பகுதிக்குச் செல்வது எனது உரிமை. ஆனால், அவர்கள் என்னை நிறுத்தியுள்ளனர்.

நான் தனியாகச் செல்லத் தயார். மாநில போலீஸுடன் செல்லவும் தயார். ஆனால், அந்த கோரிக்கையையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். சில நாள்கள் கழித்து வருமாறும், அப்போது அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இது எதிர்க்கட்சித் தலைவரின் உரிமைக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. நாங்கள் சம்பலுக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது எனப் பார்க்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும்.

அரசியலமைப்பில் உள்ள எனக்கான உரிமையை கொடுக்க மறுக்கின்றனர். இதுதான் புதிய இந்தியா, அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இந்தியா. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தின் முடிவுக்கு கொண்டுவருவதற்கான இந்தியா. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தில்லிக்கே திரும்பிச் சென்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மசூதி கள ஆய்வு செய்யப்பட்டபோது மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர்.

மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, பதற்றத்தை தணிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் உள்பட வெளி ஆள்கள் நுழைய சம்பல் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com