
ஃபென்ஜால் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி மத்திய நிதி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மாநில பேரிட நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த நவம்பர் 30 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 'ஃபென்ஜால்' புயலாக மாறி தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தாக்கியது. இந்தப் புயலால் ஏற்பட்ட கனமழையால் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய அமைச்சர்கள் மத்திய குழு அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டில் 28 மாநிலங்களுக்கு ரூ. 21,718 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 26 மாநிலங்களுக்கு ரூ.14878 கோடியும், தேசிய பேரிடர் நிதியில் இருந்து 18 மாநிலங்களுக்கு ரூ.4808 கோடியும், மாநில பேரிடர் நிதியிலிருந்து 11 மாநிலங்களுக்கு ரூ.1385 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.646 கோடியும் அடங்கியுள்ளது.
கூடுதலாக நிதி உதவி, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவக் குழுக்கள் மற்றும் விமானப்படை உள்ளிட்ட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நாளை(டிச.7) நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
ஃபென்ஜால் புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிக்காக, முதற்கட்டமாக ரூ.2,000 கோடி வழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில், மத்திய அரசு ரூ.944.80 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.