இந்தியா கூட்டணி தலைவர் விவகாரம்: சரத் பவார் - கேஜரிவால் ஆலோசனை!

இந்தியா கூட்டணி தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவரும் நிலையில் ஆலோசனை.
சரத் பவார்  அரவிந்த் கேஜரிவால்
சரத் பவார் அரவிந்த் கேஜரிவால் ANI
Published on
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் இன்று (டிச. 10) ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியா கூட்டணி தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து எழுந்துவரும் நிலையில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த இரு தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இந்த சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் கூட்டணி வைப்பது, இந்தியா கூட்டணி தலைமைப் பொறுப்பு மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தலைமைப் பண்பு குறித்து சமீபத்தில் சரத் பவார் புகழ்ந்து பேசியிருந்தார்.

மமதா தலைமை குறித்து கடந்த வாரம் அவர் பேசியதாவது, ஆம், மமதா பானர்ஜி கூட்டணியை வழிநடத்தும் திறன் கொண்டவர். நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவராக உள்ளார். அவர் அதற்கு தகுதி உடையவர்தான். அவர் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தலைவர்கள் பொறுப்புள்ளவர்கள், மக்கள் நன்கு அறிந்தவர்கள். அந்தவகையில் அவர் தகுதி பெற்றவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியா கூட்டணி தலைமை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது, ''இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமை பொறுப்பேற்க வேண்டும். இதில் காங்கிரஸ் ஆட்சேபனை அர்த்தமற்றது. மமதா தலைமையேற்றால் 2025-ல் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்'' எனக் கூறினார்.

காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சித்திருந்தார்.

ஆளும் பாஜக அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியிடங்கள் கடந்த தேர்தலை விடவும் குறைந்தது. எனினும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைக்கவில்லை.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. எனினும் மகாராஷ்டிரத்தில் தோல்வியைத் தழுவியது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் உடனான கூட்டணியில் வெற்றி கிடைத்தது.

எனினும் ஹரியாணாவில் இந்தியா கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. 3வது முறையாக ஆட்சி அமைத்தது.

இதையும் படிக்க | இந்தியா கூட்டணியை வலுப்படுத்த விரும்பினால்.. சஞ்சய் ரெளத் கருத்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com