
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது முதல் உரையை இன்று நிகழ்த்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி முதல்முறையாக உரையாற்றினார்.
அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி அதுகுறித்தான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
நமது அரசியல் சாசனம் நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம். அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம். ஆனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடி நியமனம், தனியார்மயமாக்கலால் இடஒதுக்கீடு முறையை வலுவிழக்கச் செய்கின்றனர். கடந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றிருந்தால் இந்நேரம் அரசியலமைப்பை மாற்றியிருக்கும். கடந்த தேர்தலுக்குப் பின்னர்தான் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க | தென் மாவட்டங்களில் கனமழை! சென்னையில் இன்று மழை பெய்யுமா?
கடந்த காலத்தை பற்றி பேசும் பாஜக, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் நேருதான் பொறுப்பா?
அரசியலமைப்பு உருவாக்கத்தில் நீங்கள் எவருடைய பெயரை(நேரு) நீங்கள் சில சமயங்களில் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஹெச்ஏஎல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு உள்ளவர், அவரை நீங்கள் புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும். ஆனால், இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது.
சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களில் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் மகனின் வயது மற்றவர் அவரைவிடவும் இளையவர். அவர்களின் தந்தை தையல்காரர். அவரது ஒரே விருப்பம் தனது குழந்தைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பது. அதில் ஒருவர் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அவரது இதயத்தில் இந்த கனவும் நம்பிக்கையும் விதைக்கப்பட்டது.
இன்று நாட்டு மக்கள் அனைவரும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதன் மூலமாக ஒவ்வொருவருடைய நிலைமையையும் அறிந்து அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க முடியும்.
அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக அரசு தயாராக இல்லை. மோடி அரசாங்கம் பொதுமக்களை விட பெருவணிகர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அவர்களுக்கு துறைமுகங்கள், சாலைகள், சுரங்கங்கள் என எல்லாவற்றையும் விற்றுவிட்டது.
ஒருவரைக் காப்பாற்ற 140 கோடி மக்கள் புறக்கணிக்கப்படுவதை இந்த நாடு கவனித்து வருகிறது.
பாஜகவினரால் நாட்டில் ஒற்றுமையை உருவாக்க ஒருபோதும் முடியாது, அவர்கள் மக்களிடையே பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மணிப்பூர், உத்தர பிரதேசத்தில் நாங்கள் அதனைப் பார்த்தோம்' என்று பேசினார்.
பிரியங்கா காந்தியின் முதல் உரையை அவரது சகோதரரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட சக எம்.பி.க்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.