பிரதமர் மோடிக்கு குவைத் உயரிய விருது!
குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.


குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதை அந்த நாட்டு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார். குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது விடுத்த அழைப்பின்பேரில், அந்நாட்டு தலைநகா் குவைத் சிட்டிக்கு வந்த அவரை, அந்நாட்டின் முதல் துணை பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஃபஹாத், வெளியுறவுத் துறை அமைச்சா் அப்துல்லா அலி உள்ளிட்டோா் வரவேற்றனா்.
அங்குள்ள சொகுசு விடுதியில் அவருக்கு மேள தாளங்கள் மற்றும் கதகளி நடன நிகழ்ச்சியுடன் இந்திய வம்சாவளியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
பின்னர், இந்திய சமூகத்தினா் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, ஒவ்வொரு ஆண்டும் குவைத் நாட்டுக்கு நூற்றுக்கணக்கான இந்திய பணியாளா்கள் வருகின்றனா். அவா்கள், இந்திய திறன், தொழில்நுட்பம், பாரம்பரிய சராம்சத்துடன் குவைத் நாட்டுக்கு வலுசோ்க்கிறாா்கள். இந்நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பில் இந்திய மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளா்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனா்.
இந்திய ஆசிரியா்கள் குவைத் எதிா்கால சந்ததியினரின் பிரகாசமான வாழ்வை வடிவமைப்பதில் பங்காற்றுகின்றனா். நான் குவைத் நாட்டின் தலைவா்களுடன் பேசும்போதெல்லாம், அவா்கள் இந்திய சமூகத்தினரை புகழ்வா்.
வெளிநாடுகளில் இருந்து பணியாளா்கள் பணம் அனுப்புவதில் இப்போது உலகுக்கே வழிகாட்டியாக இந்தியா திகழ்கிறது. இதற்கு இந்திய பணியாளா்களின் கடின உழைப்பே காரணம்.

குவைத் உயரிய விருதான "ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்" விருதுடன் பிரதமர் நரேந்திர மோடி- குவைத் அரசா் ஷேக் மெஷால் அல்-அகமது.
நமது இரு நாடுகளுக்கு இடையிலான உறவானது, நாகரிகம், வா்த்தகம், கடல்வழி தொடா்புகள், மக்களின் அன்பு ஆகியவற்றில் வேரூன்றியதாகும். ‘புதிய குவைத்’ கட்டமைக்க தேவையான மனிதவளம், திறன் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவால் வழங்க முடியும். இந்தியாவும், குவைத்தும் வருங்காலத்தில் குறிப்பிடத்தக்க கூட்டுறவு நாடுகளாக உருவெடுக்கும் என்றாா்.
குவைத் சிட்டியில் 101 வயது முன்னாள் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான மங்கல் செயின் ஹான்டாவை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.
இந்த நிலையில், பிரதமா் மோடிக்கு குவைத் நாட்டின் மிக உயரிய விருதான "தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்" விருதை அந்த நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வழங்கி கௌரவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக மோடி குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் தலைநகா் குவைத் சிட்டியில் உள்ள மன்னரின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், நாட்டின் உயரிய விருதான "தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்" விருதை மன்னா் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல் ஷபா விருதை வழங்கி கெளரவித்தாா்.
இந்தியா-குவைத் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்பை கெளரவிக்கும் நோக்கில், மோடிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இது பிரதமர் மோடிக்கு ஒரு நாடு அளிக்கும் 20 ஆவது சர்வதேச கௌரவம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாளமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...