புதுதில்லி: தில்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக முதல்வர் அரவிந்து கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தும் அதே வேளையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்திற்கு வருகிறது என்றும், ஆம் ஆத்மி அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாஜக தெரிவித்துள்ளதை அடுத்து மத்திய தில்லியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த முறைகேடுக்கு எதிராக பாஜக தலைமையகத்துக்கு வெளியே 11 மணிக்கு ஆம் ஆத்மி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க வரும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,"இங்கு என்ன நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு கட்சிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு மத்திய தில்லியில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா மார்க் செல்லும் பல சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்தும், சாலைகளை வெள்ளிக்கிழமை காலை முதல் மூடியும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் அருகே தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.