இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான்னை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுக வீரராக களமிறங்கினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டால் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
சர்ஃபராஸ் கானை கண்ணீருடன் கட்டியணைத்து இந்திய அணிக்கு அனுப்பிய அவரது தந்தையும் (நௌஷாத் கான்) சமூக வலைதளங்களில் வைரலானார். அவர் அணிந்திருந்த டி ஷர்ட் வாசகம் மிகவும் புகழ்பெற்றது. கிரிக்கெட் ஜென்டில்மேன்களுக்கான போட்டி மட்டுமேயல்ல; அது அனைவருக்குமானது என்ற வசனம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் சர்ஃபராஸ் கான்னை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு காரை பரிசாக வழங்குவதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். மேலும் பரிசை ஏற்றுக்கொண்டால் அது தனது பாக்கியம், கௌரவம் எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.