சென்னை: சென்னை - பெங்களூரு இரண்டடுக்கு விரைவு ரயிலில், புதிய ஏசி வசதியல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒரு பொதுப் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடைய ரயில் பெட்டிகளை மட்டுமே கொண்டிருந்த இந்த ரயில், இன்று முதல் ஏசி வசதியற்ற ஆறு பெட்டிகளுடன் இயக்கப்படுவதால், நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு, இந்த ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரயில் உருவாக்கப்பட்டபோது 10 ஏசி வசதியுடைய இரட்டை அடுக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது இது எட்டுப் ஏசிப் பெட்டிகளைஹயும், 5 ஏசி வசதியற்ற முன்பதிவு செய்த பெட்டிகளும், ஒரு பொதுப் பெட்டியுடனும் இயக்கப்படுகிறது.
சென்னை - பெங்களூரு இடையே மிக விரைவான பயணத்தைக் கொடுத்து வரும் இரண்டடுக்கு ரயில், வெறும் 5 மணி நேரம் 10 நிமிடங்களில் கடந்து சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாக விளங்குகிறது. ஆனால், இந்த பயண தொலைவை பொதுவாகக் கடக்க 6 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகுமாம்.
இதுபோலவே, கோவை - பெங்களூரு உதய் ரயிலும் ஏழு ஏசி வசதிகொண்ட இரண்டடுக்கு இருக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளுடன் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இது 8 ஏசி வசதிகொண்ட பெட்டிகளும், ஐந்து பெட்டிகள் இரண்டாம் வகுப்புக்கான இருக்கை வசதி பெட்டிகளுமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை தனித்தனி பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பெங்களூரு டபுள் டெக்கர் மற்றும் கோயம்புத்தூர் உதய் விரைவு ரயில்கள் இப்போது அவற்றின் பெட்டிகளை மாற்றிக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் விரைவு ரயிலின் முதன்மை பராமரிப்புப் பணி பெங்களூரில் இருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதே இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பெங்களூரில் உள்ள பராமரிப்பு இடம் வந்தே பாரத் விரைவு ரயிலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வழித்தடத்தை அதிகம் பயன்படுத்தும் பயணிகளோ, பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆண்டு முழுவதும் நெரிசல் மிகுந்த பெட்டிகளுடன் இயங்குவதாகவும், பகல் நேரங்களில் பெங்களூரு மற்றும் சென்னை இடையே புதிய இன்டர்சிட்டி ரயிலை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.