சண்டீகர் மேயர் தேர்தல் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் எக்ஸ் (X) எனக் குறிப்பிட்ட 8 வாக்குகளும் இந்தியா கூட்டணியின் மேயர் வேட்பாளருக்கு சாதகமாக வழங்கப்பட்டது.
இதன்மூலம், ஆம் ஆத்மியின் கவுன்சிலர் குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்ததால் சண்டீகர் மாநகராட்சியின் மேயராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் துணை மேயரானார்.
மேலும், தேர்தல் அதிகாரி அனில் மஷிஹ் தவறான முடிவுகளை அறிவித்ததால் அவர் மீது குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பாஜக 16 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. இந்தியா கூட்டணி 12 வாக்குகள் பெற்றதாகவும், பெரும்பான்மைக்கு குறைவாக இடங்களை பெற்ற பாஜக வெற்றி பெற்றதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
தேர்தல் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதில் தேர்தல் அதிகாரியிடம் சரமாரியான கேள்விகளை நீதிமன்றம் முன்வைத்தது. உண்மையாக பதிலளிக்கவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
அடையாளத்துக்காக 8 வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் எனக் குறிப்பிட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் பொய்யான அறிக்கையை அளித்ததாகக் கூறப்படும் அனில் மஷிஹ்க்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 340வது பிரிவின் கீழ் ஏன் எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை தெர்விக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றத்தின் பதிவாளருக்கு (நீதித்துறை) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.