அருணாசல பிரதேசத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அருணாசலில் முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019 பேரவைத் தேர்தலில் பாஜக 41 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.
மேலும் மாநிலத்தில் நடப்பாண்டிலேயே பேரவை மற்றும் மக்களவைக்கும் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அருணாசலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு எம்எல்ஏக்கள் என மொத்தம் 4 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பெமா காண்டு, மாநில பாஜக தலைவர் பியூராம் வாகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.