ஹைதராபாத்: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை நாளை மறுநாள் காங்கிரஸில் இணைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் இந்த முடிவை ஷர்மிளா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே, காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸின் இணைவது குறித்து ஷர்மிளா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 4-ஆம் தேதி தில்லிக்கு செல்லும் ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தனது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸுடன் இணைக்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவை ஷர்மிளா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி போட்டியிடாது என்று அறிவித்து காங்கிரஸுக்கு ஆதரவாக ஷர்மிளா பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.