இந்திய பிரதமராக இருப்பவர் செய்தியாளர்களை சந்தித்து நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்திருந்தார். 2014 ஜனவரி 3-ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுடனான சந்திப்பில் சுமார் 62 திட்டமிடப்படாத கேள்விகளை எதிர்கொண்டு பதிலளித்திருந்தார்.
அதுவே இந்தியாவுக்குள் பிரதமர் சந்தித்த கடைசி செய்தியாளர்கள் சந்திப்பாகும்.
இதுகுறித்து அப்போதைய பிரதமரின் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்த பத்திரிகையாளர் பங்கஜ் பச்செளரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பங்கஜ் பச்செளரியின் பதிவை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி வெளியிட்ட பதிவில், மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த 10 ஆண்டுகளில் 117 முறை செய்தியாளர்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, வெளிநாட்டு பயணத்தின்போது 62 முறையும், ஒவ்வொரு ஆண்டின் நிறைவில் மொத்தம் 10 முறையும், உள்நாட்டு பயணத்தின்போது 23 முறையும், தேர்தல் சம்பந்தமாக 12 முறையும் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
2014-ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை இந்தியாவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது கிடையாது.
கடந்த 2023ஆம் ஆண்டில் அமெரிக்க பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.