அகமதாபாத்தில் நடைபெரும் சர்வதேச காற்றாடித் திருவிழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்துகொண்டார். அங்கு அவரும் பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற சிலர் ராமர் புகைப்படங்களைக் கொண்ட பட்டங்களை விட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட டென்மார்க்கைச் சேர்ந்த நபர், 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டம் விழா பெரியதாக மாறியுள்ளது. எனக்கு குஜராத் மிகவும் பிடித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
வரும் ஜனவரி 14 - 15 வரை குஜராத்தின் உத்தரயான் விழா நடைபெறவுள்ளது. அந்த விழாவில் பட்டம் விடுவது முக்கியமான நிகழ்வாக உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு மாடிகளில் பல வண்ணங்களில் பட்டங்களை விட்டு வானை அலங்கரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: கடும் குளிர்: தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு
இந்த சர்வதேச காற்றாடித் திருவிழாவில் உலகமெங்கிலும் இருக்கும் பட்டம் விடுபவர்கள் பங்கேற்கின்றனர். உள்ளூர் திருவிழாவாக இருந்த இந்த பட்டத்திருவிழா சர்வதேச விழாவான பின்னர் இங்குள்ள பட்டம் செய்யும் கைவினைக் கலைஞர்கள் மிகுந்த பலனடைந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்தும் பட்டம் வாங்க வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதி, மதம் என்ற எல்லா அடையாளங்களும் இந்த விழாவில் துறக்கப்படுகிறது என வரலாற்று அறிஞர் ரிஸ்வான் காட்ரி கூறுகிறார்.