புது தில்லி: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுவித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தங்களை முன்கூட்டியே விடுவிக்குமாறு மகாராஷ்டிர அரசை குற்றவாளிகள் தற்போது அணுக முடியும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையும், குற்றவாளிகளுக்கான தண்டனையும் மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிக்கும் முடிவையும் அந்த மாநில அரசுதான் எடுக்க முடியும். எனவே, மகாராஷ்டிர மாநிலத்தின் அதிகாரத்தை அபகரித்து குஜராத் மாநில அரசு முடித்த முடிவு செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
மேலும், குற்றவாளிகள் அடுத்த 2 வாரங்களுக்குள் சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், ‘இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது, குற்றவாளிகள் ஜாமீனிலோ அல்லது சிறைக்கு வெளியே இருக்கும்போதோ முன்கூட்டியே விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியாது என்பதால், அவா்கள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டனா்.
அந்த வகையில், குற்றவாளிகள் 11 பேரும், சிறைக்கு திரும்பிய பிறகு தங்களை முன்கூட்டியே விடுவிக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசிடம் கோரிக்கை விடுக்க முடியும் எனத் தெரியவந்துள்ளது.