மாலத்தீவை எந்த நாடும் சிறுமைப்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ் தெரிவித்தார்.
சீனாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றிருந்த அவர் சனிக்கிழமை நாடு திரும்பினார். அப்போது இந்தியா - மாலத்தீவு இடையிலான சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மூயிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எங்களை எந்த ஒரு நாடும் சிறுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்தியப் பெருங்கடல் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமானது இல்லை. நாங்கள் சிறிய தீவுகளைக் கொண்டிருந்தாலும், சுமார் 9 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலான பொருளாதார மண்டலத்தைக் கொண்டுள்ளோம். இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ள நாடுகளில் மாலத்தீவும் ஒன்றாகும்.
மாலத்தீவு எந்த ஒரு நாட்டையும் சார்ந்து இல்லை. இறையாண்மை மிக்க சுதந்திரமான நாடாகும். எங்கள் நாட்டின் எந்தவொரு உள்விவகாரங்களிலும் சீனா தலையிடாது.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சில தினங்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்குள்ள கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டாா். அத்துடன், ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் கடலுக்கடியில் நீந்தும் சாகசத்தையும் முயற்சி செய்தாா்.
இது தொடா்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்ட பிரதமா், ‘அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு நிச்சயம் இடம் பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
இதையும் படிக்க | பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை!
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்து பரலவாக முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனா்.
இதையடுத்து உடனடியாக அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று எக்ஸ் தளத்தில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.