பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு வாகனங்களின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை மறுத்த நிதீஷ் குமார்!
மோப்ப நாய்களைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பூஞ்ச் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் பிரிவு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கிருஷ்ண காடி பூஞ்ச் பிரிவுக்கு அருகில் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.” என்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக, வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஜம்மு பிரிவில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.