ஜன.22ம் தேதி விடுமுறை அறிவித்ததற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது மும்பை உயர் நீதிமன்றம்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதனை முன்னிட்டு மகாராஷ்டிர மாநில அரசு ஜன.22ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்தது.
இதையும் படிக்க |
மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அந்த பொதுநல மனுவில், “அரசு வெளிப்படையாக குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு அளிப்பதும், அதைக் கொண்டாடுவதும், ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்று நடத்துவதும் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதல்
பொது விடுமுறைகளை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை, அதிகாரத்தில் உள்ள கட்சியின் விருப்பத்திற்கு ஏற்றதுபோல் மாற்றிக்கொள்ள முடியாது.
பொதுவிடுமுறை என்பது தேச பக்தர்களை நினைவுகூர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே அறிவிக்கலாம் எனவும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு விடுமுறை அளிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் காட்டுகிறது” எனக் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதையும் படிக்க |
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.