அயோத்தி ராமர் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நாளை (ஜன. 22) அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளார் ஹேமந்த் சோரன்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை!: அமெரிக்க புலனாய்வு அறிக்கை
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை அரைநாள் விடுமாறு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசுப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை முழுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வினை முன்னிட்டு, ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை அமைப்புகளுக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணிவரை அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய பணியாளா் நல அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
அதே போல, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.