மேயர் தேர்தலுக்கான தேதியை ஒத்திவைத்த சண்டிகர் நிர்வாகத்தின் உத்தரவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சண்டிகர் மேயர் தேர்தலை ஒத்திவைத்த அறிவிப்பை புதன்கிழமை ரத்து செய்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம், ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தேதியை ஜனவரி 18ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்த சண்டிகர் துணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இன்று நடைபெற்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 30ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக, ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவிருந்த மேயர் தேர்தல், தேர்தலை நடத்தும் அதிகாரியான அனில் மஸி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இந்த முடிவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க | கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை
தோல்வி பயத்தில் பாஜக தேர்தலை நடத்தவிடாமல் செய்கிறது என்று காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சனம் செய்தன.