
குவகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு சில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.
மழை காரணமாக பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் அளித்த தகவலின்படி, பிரம்மபுத்திரா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 33 ஆயிரம் குழந்தைகள் உள்பட 1.34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காமரூப், கரீம்கஞ்ச், தேமாஜி, திப்ருகர், தின்சுகியா, லக்கிம்பூர் உள்பட ஏழு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
17 வருவாய் வட்டங்களுக்கு உள்பட்ட 411 கிராமங்களில் 4,113.27 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களை வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. அசாம் மாநிலத்திலேயே கச்சார் மாவட்டம் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 67 ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரீம்நகரில் 27 ஆயிரம் பேரும், தேமாஜியில் 25 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 71 நிவாரண முகாம்களில் 11 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாகவே பிரம்மபுத்திரா நதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. நதியில் வெள்ளம் அதிகரித்து, அது மெல்ல சாலைகள், கிராமப் பகுதிகளைச் சூர்ந்துகொண்டது. இதனால், மக்கள் பல கிராமங்களிலிருந்து வெளியேற முடியாதநிலை ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.