
ஆண்டுதோறும் ஜூன் 25ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை நாளாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதை கண்டித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25-ஆம் தேதி `சம்விதான் ஹாத்யா திவாஸ்’ என்ற பெயரில் அரசியலமைப்பு படுகொலை நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அவர்கள் (பாஜக) எதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ, அதனை செய்யட்டும். ஆனால், இந்திய மக்கள் இதனை தற்போது பார்த்துக்கொண்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களை அனுபவித்து வருகின்றனர். அரசமைப்பு படுகொலையை அவர்கள் மதிப்பீடு செய்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்.
1975 ஜூன் 25ஆம் தேதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு பலர் உயிரிழந்தனர். அவர்களை நினைவுகூரும் விதமாக சம்விதான் ஹாத்யா திவாஸ் கடைபிடிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், அவசரநிலையின் போது உயிரிழந்தவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, அவைத்தலைவர் ஓம் பிர்லா அவசரகாலக் காலத்தைக் கண்டித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.