
புரி: ஒடிஸா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
கோயிலின் அடித்தளத்தில் உள்ள பொக்கிஷ அறை திறக்கப்பட்டதும் புரி ஆட்சியர், முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத், ஸ்ரீஜெகந்நாதா் கோயில் நிா்வாகத்தின் தலைமை நிா்வாகி அரவிந்தபதி, தொல்லியல் துறை கண்காணிப்பாளா் டி.பி.கதநாயக் உள்ளிட்ட மாநில அரசின் 11 பேர் சிறப்புக் குழுவினா் அறைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனா். திறப்பு பணி முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
பொக்கிஷ அறையில் இருந்த வைரம், வைடூரியம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீ ஜெகநாதர் கோயிலின் நகைகளை வைப்பதற்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறப்பு பெட்டிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புரி கோயில் பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
இப்போது 46 ஆண்டுகளுக்குப் பின் பழுதுபாா்ப்பு மற்றும் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர பழங்காலப் பொருள்களை முழுமையாக பட்டியலிடும் பணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
12 ஆம் நூற்றாண்டின் ஸ்ரீ ஜெகநாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறையில் வைரங்கள், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் உள்ளிட்ட அரிய வகை நகைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் மற்றும் மன்னர்களால் ஜெகந்நாதருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒடிஸாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் புரி ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறையை திறக்கும் விவகாரம், முக்கிய அரசியல் பிரச்னையாக எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.