
புது தில்லியில் அடுத்த வாரம் நிகழவுள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், இதுவரை இருந்துவந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக "நிதி ஆயோக்" அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்துவருகிறார்.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜூலை 25-ம் தேதி தேசிய தலைநகருக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை 27ல் நடைபெறும் நிதி ஆயோக்கின் ஒன்பதாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் மம்தா கலந்துகொண்டு மாநிலத்திற்கான மத்திய நிலுவைத்தொகை மற்றும் கிராமப்புற வீட்டுவசதி மற்றும் எம்ஜிஎன்ஆர்இஜிஏ நிதிகள் குறித்த பிரச்னையை எழுப்ப உள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் புது தில்லியில் தங்கியிருக்கும்போது கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா பிரிவின் மூத்த தலைவர்களையும் சந்திக்கலாம்.
மேலும், நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான கவுன்சிலில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை ஆளுநர்களும் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி, 3-வதுமுறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.
கடந்தாண்டு மே 27-ம் தேதி நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்ததில் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகள் விவாவதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.