ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசிய சந்திரபாபு நாயுடு!
ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இன்று (ஜூலை 25) நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஆட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமிருந்ததாக குற்றம் சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது, ``கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் போதைப்பொருள் தலைநகரமாக ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது. அதில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பங்கு இருக்கிறது. அவர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ரகுராமா கிருஷ்ணா ராஜு அளித்த கொலை முயற்சி வழக்கும் அடங்கும்.
பப்லோ எஸ்கோபார் என்பவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்; அவர் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாகவும், தன்னை எதிர்க்கும் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் கொன்றதாகவும் கூறுகின்றனர்.
எஸ்கோபாரை `போதைப்பொருள் பயங்கரவாதி’ என்று அழைப்பர். போதைப்பொருள்களை விற்பனை செய்வதன் மூலமும் ஒருவர் பணக்காரராக முடியும் என்பதைக் காட்டினார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைமையின்கீழ் நடந்த ஆட்சியிலும் இதேபோன்ற நிலைமை உருவானது” என்று கூறினார்.
நேற்று தில்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரத்தில் தற்போதைய ஆட்சியில் வன்முறைகள் அதிகம் நிலவிவருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.