

நள்ளிரவில் பேருந்து சேவை இல்லாததால் தனது மாமியார் வீட்டிலுள்ள மனைவியை காணும் ஆவலில் அரசுப் பேருந்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசத்திலுள்ள நந்தியால் மாவட்டம் வேங்கடபூர் பகுதியை சேர்ந்தவர் துர்க்கையா. லாரி ஓட்டுநரான இவரது மனைவி இவரை விட்டுப்பிரிந்து தனது தாயாருடன் முச்சுமர்ரி பகுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மனைவியை காண்பதற்காக புறப்பட்ட துர்க்கையா நள்ளிரவில் ஆத்மகுரு பேருந்து நிலையம் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கே விடிய விடிய காத்திருந்த அவர் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் விரக்தியடைந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தில் ஏறி அதனை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதிகாலையில் பேருந்து மாயாமானது குறித்த தகவலறிந்த பணிமனை அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முச்சுமர்ரி பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் பேருந்தை மீட்டதுடன், திருட்டுத்தனமாக பேருந்தை இயக்கிய லாரி ஓட்டுநர் துர்க்கையாவை கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன்னிடம் செலவுக்கு பணம் இல்லாததால் மனைவியை காண வேறு வழியின்றி அரசுப் பேருந்தை இயக்கியதாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.