

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 வேகன்கள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது, அதிலிருந்த இரண்டு வேகன்கள் மட்டும் தண்டவாளத்திலிருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் தற்போது விபத்து நேரிட்டப் பகுதியில்தான், கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அதே இடத்தில் இன்று மீண்டும் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார், அதில், இன்று மற்றொரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது, வடக்கு வங்கத்தின் ரங்கபாணி பகுதியில். ஆறு வாரங்களுக்கு முன்பு மிக மோசமான ரயில் விபத்து நேரிட்ட அதே பகுதியில், இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்டில் செவ்வாய்க்கிழமை காலை ஹௌரா - மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். இன்று மேற்குவங்கத்தில் ரயில் விபத்து நேரிட்டுள்ளது.
திங்களன்று, பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் ‘பிகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்’ எஞ்ஜின் குதிராம் போஸ் பூசா ரயில் நிலையத்துக்கும் கர்ப்பூரி கிராம் ரயில் நிலையத்துக்கும் இடையே பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனியாகக் கழன்று சென்றது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.