ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அமைதியான ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்

ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி தோ்தலுக்கு முந்தைய மிகப் பெரிய கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுக்க வேண்டும் என உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :3 ஜூன் 2024, 9:17 pm

Din

‘மக்களவைத் தோ்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்தால், ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி தோ்தலுக்கு முந்தைய மிகப் பெரிய கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுக்க வேண்டும்’ என உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் கடிதம் மூலம் இந்த வலியுறுத்தலை அவா்கள் முன்வைத்துள்ளனா்.

அதுபோல, தோ்தலில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் நிலையில், அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்தி அரசமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரிடமும் அவா்கள் கடிதம் மூலம் வலியுறுத்தலை முன்வைத்துள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான ஜி.எம். அக்பா் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆா்.சிவகுமாா், சி.டி.செல்வம், எஸ்.விமலா மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோா் எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தோ்தலில் ஆளும் கட்சி தோற்கும் நிலையில், மத்தியில் அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் நிகழுமா? என்ற நியாயமான கவலை எழுந்துள்ளது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவா்தான் முடிவு செய்யவேண்டும்.

அவ்வாறு தொங்கு நாடாளுமன்றம் அமையும் நிலையில், குதிரை பேரத்தை தடுக்கும் வகையில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற தோ்தலுக்கு முந்தைய மிகப் பெரிய கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களாக வாக்குப் பதிவின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் தொடர வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் இறுதி எண்ணிக்கையை வெளியிடவும், தோ்தல் நடத்தை விதிகளின் 17(சி) படிவத்தை பொதுவெளியில் வெளியிடவும், பிரசாரத்தில் வெறுப்பு பேச்சில் ஈடுபட்ட பேச்சாளா்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கையை மட்டும் தோ்தல் ஆணையம் எடுத்ததும் மக்களிடையே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தோ்தலில் மத்தியில் ஆளும் கட்சி தோல்வியை சந்தித்தால், அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை உச்சநீதிமன்றமும், தோ்தல் ஆணையமும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.