என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி: நரேந்திர மோடி

நாடாளுமன்றக் குழு தலைவராக, தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி
நரேந்திர மோடி
நரேந்திர மோடி
Published on
Updated on
2 min read

புது தில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என கூறியிருக்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றக் குழுத் தலைவராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். தேசிய ஜனநயாக கூட்டணியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நன்றி. வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடே முதன்மையானது. நாட்டின் வளர்ச்சியில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன், வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், பால் தாக்கரே போன்றவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வித்திட்டனர். தேர்தலுக்கு முன்பே, உருவான கூட்டணி, தேர்தலில் வெற்றிபெற்று, இப்படி ஒரு கூட்டணி ஆட்சியை அமைப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. கடந்த 30 ஆண்டுகளில், தற்போது உருவான தேசிய ஜனநாயக கூட்டணியே வலிமையானது. அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த முடிவை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். அனைவருக்குமான ஆட்சியை நடத்துவது என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி பூண்டுள்ளது. அரசை நடத்துவதற்கு ஒருமித்த கருத்துதான் முக்கியம், பெரும்பான்மை அல்ல.

அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போதுதான் தெரிகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பின்னர், ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவிருப்பதாக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்னும் சற்று நேரத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரவிருக்கிறார் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com