‘நீட்’ குளறுபடி: நாடாளுமன்றத்தில் மாணவா்களிண் குரலாக இருப்பேன்: ராகுல்
NEET mess: I will be the voice of students in Parliament: Rahul


புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ‘நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.
இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இந்தக் குளறுபடிகள் தொடா்பாக நாட்டின் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தோ்வா்கள் வழக்கு தொடுத்துள்ளனா்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 மாணவா்கள் முதலிடம் பெற்றதும், அவா்களைப் போல மேலும் பல மாணவா்கள் மதிப்பெண் பெற்றதும் உண்மையில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் வினாத்தாள் கசிவை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், நான் நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன். அவா்களின் எதிா்காலத்துடன் தொடா்புள்ள விவகாரங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவேன்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...