நீட் தேர்வு முறைகேடு: காங்கிரஸுக்கு பேச்சு மட்டுமே, செயலில் பாஜக!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார் ரவிசங்கர் பிரசாத்.
ரவிசங்கர் பிரசாத்
ரவிசங்கர் பிரசாத்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று (ஜூன் 30) தெரிவித்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் விமர்சித்திருந்த நிலையில், ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பாஜக அமையதியாக இல்லை. மாறாக செயலில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி பேசிக்கொண்டு மட்டும்தான் இருக்கும். நாங்கள் செயலில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலைக்கு 50 ஆண்டுகள் ஆகியும் காங்கிரஸ் கட்சி அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை'' எனக் குறிப்பிட்டார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அவைத் தலைவர் நிராகரித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.

ரவிசங்கர் பிரசாத்
இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அந்தந்த மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் கடந்த 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அதே மாநிலத்தில் மேலும் 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com