கேரள மாநிலம் திருசூர் அருகே உள்ள தாரக்கல் கோயில் திருவிழாவின் இறுதி நாளான உபசரம் சொல்லல் நிகழ்ச்சியின்போது, இரண்டு யானைகளுக்குள் சண்டை உருவானதால், திருவிழாவுக்கு வந்திருந்த பலர் காயமடைந்தனர்.
கோயில் யானைகளுக்குள் நடந்த சண்டையின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
கோயில் திருவிழாவின்போது, வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் ஊரக்கத்தின் ‘அம்மாதிருவடி’ திருவுருவத்தை யானை மீது வைத்து ஊர்வலமாகச் சென்றபோது, யானை மிரண்டு மதம்பிடித்தது போல ஆனது. அந்த யானையின் பாகன் ஸ்ரீகுமாரை (53) யானை மூன்று முறை தாக்க முயன்றபோது, நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஆராட்டுப்புழா குலதெய்வத்துக்காகக் கொண்டு வரப்பட்ட புத்துப்பள்ளி அர்ஜூன் யானையையும், மதம்பிடித்த யானை தாக்கியது. முதலில் தற்காத்துக் கொள்ள ஓடிய யானையை, மதம்பிடித்த யானை துரத்தித் தாக்கிய நிலையில், இரண்டு யானைகளுக்குள்ளும் சண்டை மூண்டது. ஒரு யானை மற்றொரு யானையைத் தாக்கத் தொடங்கியதில், திருவிழாவுக்கு வந்திருந்த பலருக்கும் காயமேற்பட்டது. சிலரை யானைகள் தூக்கி தரையில் வீசியதாகவும் கூறப்படுகிறது. சிலர், சம்பவ இடத்திலிருந்து ஓட முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த அர்ஜூனன் யானை, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு நிற்காமல் ஓடியது. மதம்பிடித்த யானை, பிறகு யானைகள் படையால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.