தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி தில்லியில் மாபெரும் பேரணி நடக்கவுள்ளது.
தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர்.
அப்போது அரவிந்த் கேஜரிவாலை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பின்னா் அவருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலோ வைக்கப்படலாம். எனவே, அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 27 ஆம் தேதிக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி தில்லியில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்தி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்வுள்ளன.
நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது.