திகாரில் அடைக்கப்படுகிறாரா கேஜரிவால்?
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சிறையில் உள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உடல்நிலை பாதிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை 7 நாள்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவாலுக்கு விதிக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.