மக்களவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான வரம்புகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தில்லி ராம்லீலா திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், கலந்துகொண்ட பிரியங்கா காந்தி, இந்தியா கூட்டணியின் கோரிக்கைகளை பிரியங்கா காந்தி வாசித்தர்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''மக்களவைத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கான வரம்புகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் மீதான அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் தேர்தலில் எதிரொலிக்கும்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அந்தந்தக் கட்சிகளின் தேர்தல் பணிகளை முடக்க வாய்ப்புண்டு.
எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக முறைக்கு புறம்பான தடைகளை ஆளும் பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. நாட்டைக் காப்பதற்காக இந்தியா கூட்டணி போரிட்டு வருகிறது. இதில் வெற்றி பெற்று ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்'' என பிரியங்கா காந்தி கூறினார்.