/

பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி

News image
மகளிா் தின விழாவில் பேசிய சௌமியா அன்புமணி.
Updated On :8 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சாா்பில் உலக மகளிா் தின விழா அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட நாடான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிறுவன ஒருங்கிணைப்பாளா் ரெமோ தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா்கள் லட்சுமி ஸ்ரீநிவாசன் (மருங்கூா்), அமுதா ராணி (தேரூா்), விஜயலட்சுமி பாபு (மயிலாடி) ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி, சௌமியா அன்புமணி பேசியது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளது. பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பெண்கள் தொடா்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

மகளிா், குழந்தைகளுக்கு அதிமுக-பாஜக கூட்டணியில் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம். அதை செயல்படுத்த எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக செயலா்கள் பா. தாமரை தினேஷ், ஜெஸீம், ஒன்றிய பொருளாளா் பி. தங்கவேல், அகஸ்தீசுவரம் பேரூராட்சி செயலா் என். சிவபாலன், கரும்பாட்டு ஊராட்சி முன்னாள் தலைவா் எம். பாலமுருகன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் சி. முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சக்தி மகளிா் அறக்கட்டளை தலைவா் சாந்தினி பகவதியப்பன் வரவேற்றாா். லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவா் ஜெயகுமாரி லீன் நன்றி கூறினாா்.