காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலைக்குச் செல்வோருக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் செகான் பகுதியில் இன்று(மே. 6) தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது உறுதி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, வேலையில்லாமல் அல்லாடும் இளையோருக்கு ஓராண்டுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் செல்வோருக்கு ரூ. 250 ஆக வழங்கப்பட்டு வரும் ஊதியம், ரூ. 400 ஆக உயர்த்தப்படுவதோடு, ஏழைப் பெண்களின் வங்கிக்கணக்கில் அரசின் மூலம் ரூ. 1 லட்சம் வரவு வைக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார் ராகுல் காந்தி.
இந்த தேர்தல் நாட்டின் அரசமைப்பை மட்டுமன்றி, இடஒதுக்கீடு முறை, நாட்டின் பொதுத்துறை, பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்காக நடைபெறும் யுத்தம். இவற்றையெல்லாம் அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களுக்கு வழங்கிட மோடி விரும்புகிறார் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.