மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்ய கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஏற்கெனவே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட ’அரசு முன்னுரிமை கடவுச்சீட்டை’ ரத்து செய்யக் கோரி கடந்த மே 1-ஆம் தேதி மோடிக்கு சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார்.
முன்னாள் பிரதமர் தேவகெளடா பேரனும் ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே முன்னுரிமை கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜெர்மனி சென்றுவிட்டார்.
இந்த நிலையில், பிரஜ்வலுக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை கடவுச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமருக்கு மே 22ஆம் தேதியிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில், “பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதை அறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக ‘அரசு முன்னுரிமை கடவுச்சீட்டை’ பயன்படுத்தி ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டைவிட்டு பிரஜ்வல் தப்பிச் சென்றது வெட்கக்கேடானது. சிறப்பு புலனாய்வுக் குழு பிரஜ்வல் மீது லுக்-அவுட் நோட்டீஸ், புளூ கார்னர் நோட்டீஸ் உள்ளிட்டவை பிறப்பித்துள்ளது. ஆகையால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை கடவுச்சீட்டை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறைக்கு கர்நாடக அரசு இரண்டு நாள்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளது.
கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கான முதல்கட்ட மக்களவைத் தோ்தல் ஏப். 26ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில் ஹாசன் தொகுதி மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் பாலியல் ரீதியாக சில பெண்களை துன்புறுத்தியது தொடா்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதுதொடா்பாக பிரஜ்வல் ரேவண்ணா, எச்.டி.ரேவண்ணா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஏப்.27ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா ஜொ்மனிக்குச் சென்றுவிட்டாா். இருவா் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏப். 28ஆம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) கா்நாடக அரசு அமைத்தது.