புணே கார் விபத்து: இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம்

புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா்.
Published on
Updated on
1 min read

புணே கார் விபத்து வழக்கில் கடமை தவறியதற்காக இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், புணே, கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டியுள்ளாா். அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து தொடா்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சிறுவனை காா் ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோரின் அலட்சியம் மக்களின் விமா்சனத்துக்குள்ளானது.

மேலும், சிறுவனை கட்டாய ஆலோசனை மற்றும் போதைமீட்பு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும் சாலைப் பாதுகாப்பு குறித்து 300 எழுத்துகளில் கட்டுரை எழுதச் சொல்லியும் கைது செய்யப்பட்ட 15 மணிநேரத்தில் சிறாா் நீதி ஆணையம் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியதற்கு பொது மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. பின்னர் சிறுவனுக்கு வழங்கப்பட்ட பிணையும் ரத்து செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வழக்கின் விசாரணை புணே குற்றப்பிரிவு காவல்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமா்வு நீதிமன்றத்தின் முடிவை எதிா்நோக்கி காத்திருக்காமல், விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மீது சிறாா் நீதிச் சட்டத்தின் 75 மற்றும் 77 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புணே காவல்துறையினரால் தந்தை கைது செய்யப்பட்டாா். மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பன்னிரெண்டாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதையொட்டி, அப்பகுதியிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நண்பா்களுடன் இணைந்து சிறுவன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் போதையில் காா் ஓட்டியது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த புணே காவல்துறை ஆணையா் அமிதேஷ் குமாா், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு சிறுவனை வயது வந்தவராக கருதியும், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா். மகாராஷ்டிரத்தில் மதுகுடிப்பதற்தான சட்டபூா்வ அங்கீகார வயது 25-ஆகும். அந்தவகையில், 17 வயது சிறுவனுக்கு மதுவிற்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு மது கூடங்களின் உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கடமை தவறியதற்காக இரண்டு காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com