
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளின் தாய் என்றும் பாராமல், 31 வயது நிரம்பிய ஆசிரியை ஒருவர் கடந்த 2 நாள்களுக்கு முன், பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதுடன் சித்ரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் பழங்குடியின அமைப்பான (ஐடிஎல்எஃப்) தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த சனிக்கிழமை, பிஷ்னுபூர் மாவட்டத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய்டோன் கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை குறிவைத்து அருகாமையிலுள்ள மலைப்பகுதியிலிருந்து ஆயுதப்படையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். அதில், அங்கிருந்த சாப்பம் சோஃபியா என்ற 27 வயது இளம்பெண்ணின் உடலில் குண்டு துளைத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு ஓடிய விவசாயிகள் பாதுகப்பான இடங்களுக்குச் சென்று தங்களைக் தற்காத்துக் கொண்டனர். இதன் காரணமாக குண்டடி பட்ட இளம்பெண்ணின் உடல், உழவு நிலத்திலேயே வெகு நேரம் கிடந்துள்ளது.
அதன்பின், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் மீது பதிலடி தாக்குதலைத் தொடுத்துள்ளனர். எனினும், அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அரங்கேறி வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 60,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.