
க்யூ ஆர் கோடு கொண்ட பான் அட்டைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளுக்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட பான் கார்டு அறிமுகப்படுத்தும் பணியை மத்திய அரசு விரைவாகத் தொடங்கவிருக்கிறது.
தற்போது நிரந்தர கணக்கு எண் ( பான் ) என்பது பத்து இலக்கங்களைக் கொண்ட எழுத்து மற்றும் எண்களைக் கொண்ட அதாவது எண்ணெழுத்து அடையாள அட்டையாக பயன்பாட்டில் உள்ளது. இது இந்திய வருமான வரித் துறையால் விண்ணப்பிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பல ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இருக்கும் பான் அட்டையை புதுப்பித்து, க்யூஆர் கோடு கொண்ட பான் 2.0 என்ற திட்டத்தை வருமான வரித்துறையினர் செயல்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியக் குழு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,435 கோடி ஒதுக்கப்பட்டுளள்து.
இந்திய அரசின் இந்த முன்முயற்சியானது தற்போதைய வரி செலுத்துவோர் பல்வேறு வரி விவரங்களின் பதிவு முறையை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்து, முழு செயல்முறையையும், சாதாரண மக்களுக்கும் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.
அது என்ன பான் அட்டை 2.0?
நிரந்தர கணக்கு எண் அட்டையை மத்திய அரசு புதிதாக மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. தற்போதிருக்கும் பான் மற்றும் வரிப் பிடித்தம் மற்றும் வசூலித்தல் கணக்கு எண் எனப்படும் டாக் எண்களையும் முறையே சீர்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மின்னணு - நிர்வாகத்தின் ஒரு பகுதியாக பான் 2.0 கொண்டுவரப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு, தொழில்நுட்பத்தின் பயன் கிடைக்கும் வகையில் இது மேம்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை மிகவும் சீரான முறையில், பயனாளர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், விரைவாகவும் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
புதிய பான் அட்டையில் அனைத்து விவரங்களும் அடங்கிய க்யூஆர் கோடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பயன்கள்?
பயன்பாடு, பாதுகாப்பு, நிலைத்தன்மை போன்ற பல பயன்கள் பயனாளர்களுக்குக் கிடைக்கும்.
வரித்துறை சேவைகள் பயனர்களுக்கு மிக விரைவாகக் கிடைக்கும்.
தவறுகள், பிழைகள் குறைவாக இருக்கும் வகையில் புதிய அட்டை அமைந்திருக்கும்.
காகிதப் பயன்பாடில்லாத வகையில் உற்பத்திச் செலவு குறைவான வகையில் இந்த அட்டை உருவாக்கப்படும்.
பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போதிருக்கும் பான் அட்டை?
தற்போது பயன்பாட்டில் உள்ள பான் அட்டை செல்லுபடியாகும். புதிதாக வரும் பான் அட்டையில் க்யூஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும் என்பதால் முழு விவரமும் கிடைக்கும். ஆனால், இதனால் தற்போதிருக்கும் பான் அட்டைக்கு எந்த பாதிப்பும் இல்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை தேவைப்பட்டால், மத்திய அரசு இலவசமாகவே அதனை மாற்றிக்கொடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.