

புது தில்லி: மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு (41) ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இப்போது அவருக்கு மத்திய துணை ராணுவப் படையான ஷசஸ்திர சீமா பல் வீரா்கள் அடங்கிய சிறிய குழு பாதுகாப்பு அளித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்புப் பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அமைச்சா் சிராக் பாஸ்வான் நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் பாதுகாப்புக்காக சிஆா்பிஎஃப் வீரா்கள் உடன் செல்வாா்கள்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா மற்றும் மத்திய அமைச்சா்கள் பலருக்கு சிஆா்பிஎஃப் வீரா்கள்தான் பாதுகாப்பு வழங்கி வருகின்றனா்.
முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் ‘இஸட் பிளஸ்’ என்பது மிகவும் உயரிய பாதுகாப்பு கொண்டது. ‘இஸட்’, ‘ஒய் பிளஸ்’, ‘ஒய்’, ‘எக்ஸ்’ ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பாதுகாப்புப் பிரிவுகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.