சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 18 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சத்யேந்தா் ஜெயினுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவா் சத்யேந்தா் ஜெயின். கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு நபா்களின் பெயரில் அசையும் சொத்துக்கள் வாங்கியதாக இவா் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
பின்னா், அதே விவகாரத்தில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை, அவரைக் கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்தது.கடந்த ஆண்டு மே மாதம் மருத்து காரணங்களுக்காக சத்யேந்தா் ஜெயினுக்கு உச்சநீதிமன்றம் சிறிது காலம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது.
இதையடுத்து, அவா் மீண்டும் திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடா்ந்த சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் ஜாமீன் கோரி சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தில்லி ரெளஸ் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இரு தரப்பு வாதங்களை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ஜாமீன் மனு மீதான தனது தீா்ப்பை ஒத்திவைத்திருந்தாா்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு தில்லி ரெளஸ் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணையில் தாமதம் மற்றும் சத்யேந்திர ஜெயின் நீண்ட காலமாக சிறையில் இருந்ததைக் காரணம் காட்டி அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.